விளையாட்டு

"ஒருவரை நீங்கள் குறிவைத்தால் 11 பேரும் துணை நிற்போம்" - இங்கிலாந்துக்கு ராகுல் எச்சரிக்கை

jagadeesh

எங்களில் ஒரு வீரரை மட்டும் நீங்கள் குறி வைத்து செயல்பட்டால் அவருக்கு பக்கபலமாக நாங்கள் 11 பேரும் துணை நிற்போம் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய வீரர் கே.எல்.ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தை 120 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா. இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

முன்னதாக பும்ரா - ஷமி பேட்டிங் செய்தபோது இங்கிலாந்து வீரர்கள் வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இந்த வார்த்தை போருக்கு பின்புதான் பும்ரா - ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாட தொடங்கினர். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் "இரு பலமான அணிகள் மோதும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரணமானதுதான். இதற்கெல்லாம் காரணம் இரு அணிகளும் வெற்றிப்பெற வேண்டும் என்று நினைப்பதே காரணம்" என்றார்.

தொடர்ந்து பேசிய கே.எல்.ராகுல் "எங்களுக்கும் சிறிது வார்த்தை போரில் ஈடுபடுவது பிடிக்கும். ஆனால் எங்களில் ஒரு வீரரை மட்டும் குறி வைத்து நீங்கள் தாக்கினாலோ பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம். நாங்கள் பவுலிங் போடும்போது இந்தச் சம்பவங்களால் மிகவும் உத்வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதுதான் எங்களுக்கு வெற்றியை தர உதவியது" என்றார் ராகுல்.