விளையாட்டு

தோனிக்கு பயம் காட்டுவாரா ரஸ்ஸல் ?

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிப் பெற்றன. சிஎஸ்கே தனது முந்தைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றிக் கொண்டது. சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சாளர்களால், பஞ்சாப் அணியுடனான வெற்றி எளிதில் சாத்தியமானது. அதேபோல கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சாத்தியமே இல்லாத வெற்றிகளை தனது அதிரடி ஆட்டத்தால் சாத்தியமாக்குகிறார்.

இரு அணிகளுமே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளன. எனினும் ரஸ்ஸலின் ஆட்டமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி ரஸ்ஸல் கொல்கத்தாவுக்கு வெற்றியை தேடித் தந்தார். இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றனர். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்துக்கு செல்லும். சிஎஸ்கே-வை பொறுத்தவரை 
ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரும், கொல்கத்தாவில் சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் மிரட்டி வருகின்றனர். அதேபோல வேகப்பந்து வீச்சுக்கு சிஎஸ்கேவில் சாஹர், தாக்குர் ஆகியோர் தங்களால் முடிந்த அளவுக்கு உதவியாக இருக்கின்றனர். 

பேட்டிங்கை பொறுத்தவரை சிஎஸ்கேவின் தொடக்கம் கொஞ்சம் சுமாராகவே இருக்கிறது. வாட்சன், ராயுடு, ரெய்னா ஆகியோர் பெரியளவில் சோபிக்கவில்லை. கடந்தப் போட்டியில் கூட டூ பிளசிஸ் மற்றும் தோனியும் சேர்ந்துதான் அணியை காப்பாற்றினர். கொல்கத்தாவில் லின், நரேன், உத்தப்பா, ரஸ்ஸல் ஆகியோர் கெத்து காட்டி வருகின்றனர். இன்று சேப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் தோனி எப்படி ரஸ்ஸல் அதிரடியை சமாளிக்ப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.