விளையாட்டு

பதிலடி கொடுப்பாரா தோனி? வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா?

பதிலடி கொடுப்பாரா தோனி? வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா?

webteam

12ஆ‌வது‌ ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில்‌ சென்னை சூப்பர்‌ கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணி‌கள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பலம் ‌வாய்ந்த இவ்விரு அணிகள் இடையிலான போட்டி ஹைதபாராத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

முதல் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணிக்கு தலைமை தாங்கி வருபவர் தோனி. தனித்துவமிக்க தலைமைப் பண்பால், வியக்கத்தக்க உத்திகள் மூலம் சென்னை அணியை மூன்று முறை வெற்றிக் கோப்பையை முத்தமிடச் செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் ஐபிஎல்லிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மும்பை அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா, அந்த அணியை இரு முறை அரியணையில் ஏற்றி உள்ளார்.

தோனி உலக அளவில் பல சாதனைகளை புரிந்து கேப்டன்ஷிப்பில் முடிசூடா மன்னராக திகழ்கிறார். குறிப்பாக உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இருப்பினும் தோனியின் கேப்டன்சி சாதனைகள் ரோகித் சர்மாவின் மும்பை அணியிடம் பலிக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மையாகும்.

ரோகித் தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் இதுவரை மோதியுள்ள போட்டிகளில் மும்பை அணி 10 முறையும், சென்னை அணி 6 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், ரோகித்தின் மும்பை அணி சென்னையை தோற்கடித்து பட்டத்தை தனதாக்கியது.

மேலும் நடப்புத் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. சென்னையை மூன்று போட்டிகளில் சந்தித்துள்ள மும்பை அணி, மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளதால் ரோகித்தின் தலைமை தாங்கும் திறன் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது எனலாம்.

வரலாற்றை மாற்றி அமைத்து மும்பை உடனான தொடர் தோல்விக்கு தோனி பழி தீர்ப்பாரா அல்லது ரோகித் தனது சென்னை அணியுடனான ஆதிக்கத்தை தொடர்வாரா என்பது இன்றிரவு தெரியவரும்.