விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஷூவை ஓடி ஓடி துடைத்த அந்த நபர் யார்?

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஷூவை ஓடி ஓடி துடைத்த அந்த நபர் யார்?

JustinDurai

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்களின் ஷூக்களில் உள்ள சகதியை துடைத்து சுத்தம் செய்து கவனம் ஈர்த்த ஊழியர் ரகு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 4வது லீக் போட்டியாக வங்காளதேச அணியை கடந்த புதன்கிழமை எதிர்கொண்டது. மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட சூழலில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னணியில் ரகு என்ற நபரும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாகி உள்ளார். இதற்கு காரணம் அன்றைய போட்டியில் அவர் செய்த காரியம்தான்.

பங்களாதேஷ் இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட்டதால் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. அப்போது கையில் தண்ணீர் மற்றும் பிரஸ் உடன் புறப்பட்ட ரகு, ஒவ்வொரு வீரராக சென்று ஷூக்களில் உள்ள சகதியை அகற்றி சுத்தம் செய்தார். இவரின் இந்த செயலால் தான் அன்று இந்திய வீரர்கள் எவ்வித சிரமமின்றி ஃபீல்டிங் செய்தனர்.

யார் இந்த ரகு?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் முக்கியமான உறுப்பினராக இருக்கிறார் ரகு. இந்திய அணியில் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ஆக, அதாவது பந்துகளை த்ரோ செய்து பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார் இவர். தனது பணியோடு சேர்த்து வீரர்களின் ஷூக்களையும் சுத்தம் செய்துவிட்ட அவருக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா வெளியேற்றம்