விளையாட்டு

சாதனை மழையில் நனைந்த விராட் கோலி !

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பல புதிய சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். 

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷிகார் தவான் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இவரும் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்து வருகின்றனர். அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜாவித் மியாண்டட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்திருந்த 1930 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். 

அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த கோலி அரைசதம் கடந்தார். மறுமுனையில் ரோகித் ஷர்மா (18) ரன்களுடன் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 20 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். எனினும் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவர் ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக வேகமாக 2000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இவர் 34 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்துள்ளார். இவர் இந்தியாவின் ரோகித் ஷர்மா படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 37 போட்டிகளில் 2000 ரன்களை கடந்திருந்தார். 

இதன்பின்னர் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 42 சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் விராட் கோலி மற்றொரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது கேப்டனாக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கேப்டனாக விராட் கோலி 6 சதங்கள் அடித்துள்ளார். 

அத்துடன் இந்தப் போட்டியில் அடித்த ரன்களின் மூலம் விராட் கோலி ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இந்தப் பட்டியலில் கங்குலி(11363) ரன்களை கடந்துள்ளார். மறுமுனையில் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்துள்ளார். விராட் கோலி 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. ஸ்ரேயஸ் ஐயர் 58 ரன்களுடனும் கேதார் ஜாதவ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.