விளையாட்டு

பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பம்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்தது.

(பரத் அருண்)

இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் , சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், விண்ணப்பித்தவர்களிடம் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டாம் மூடி இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் பயிற்சியாளராக இருந்தார். விராத் கோலியின் ஆதரவு இருப்பதால் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேச பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாள ராக ஏற்கனவே பதவி வகித்திருக்கும் இவர், கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாள ராக செயல்பட்டார்.