விளையாட்டு

எனது உடலில் இதுவரை பெரிய காயங்கள் ஏற்பட்டதில்லை: மேரிகோம்

webteam

நான் வென்ற ஒவ்வொரு பதக்கத்திற்கு பின்பும் கடுமையான போராட்டத்தின் சொந்தக் கதை ஒன்று உள்ளது எனக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார். 

வியட்நாமில் நடைப்பெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் 48 எடை கிலோ பிரிவில் பங்கேற்ற மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் ஐந்தாவது முறையாக மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய கண்டங்களுக்கு நடைபெறும் போட்டியில் இதுவரை எந்த வீராங்கனையும் 5முறை பதக்கம் வென்றதில்லை. மேரிகோம் தற்போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இது குறித்து மேரிகோம் கூறுகையில், இந்தப் பதக்கம் நான் வெற்றி பெற்ற அனைத்துப் பதக்கங்களைப் போலவே எனக்கு மிகவும் சிறப்பானது.ஏனெனில் எனது போராட்டங்களின் சொந்த கதை இது. நான் வென்ற ஒவ்வொரு பதக்கமும் கடினமான போராட்டத்தின் கதை. நான் ஒரு எம்.பி. ஆன பிறகு கிடைத்து வரும் இந்தப் பதக்கங்கள் என் புகழை இன்னும் அதிகமாக்கும் என நான் நம்புகிறேன். இதுவரை மிகப் பெரிய காயங்கள் ஏதும் எனது உடலில் ஏற்பட்டதில்லை. அதுவே என் வெற்றிக்கான ரகசியம் என்றார்.