Dhoni - Hardik @hardikpandya7 | Twitter
T20

ஐபிஎல் இறுதிப்போட்டி: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? விரிவான தகவல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் விதிப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

webteam

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டி ரிஸர்வ் டேவில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டு டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டால் ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும்.

rain

போட்டி இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கினால் இரு அணிகளும் தலா 19 ஓவர்கள் விளையாடும். 10.30 மணிக்கு தொடங்கினால் தலா 15 ஓவர்களும், 11 மணிக்கு தொடங்கினால் தலா 12 ஓவர்களும், 11.30 மணிக்கு தொடங்கினால் தலா 9 ஓவர்களும், நள்ளிரவு 12.05 மணிக்கு தொடங்கினால் தலா 5 ஒவர்களும் போட்டி நடைபெறும்.

ஒருவேளை முதல் இன்னிங்ஸ் முழுமையாக நிறைவுபெற்று, இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட்டால் டிஎல்எஸ் விதிப்படி சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றிபெறும் ரன் இலக்கு மாற்றி அமைக்கப்படும். 12.05 மணிக்கு பிறகும் போட்டி தொடங்கவில்லை என்றால் வெற்றியை தீர்மானிக்க இரு அணிகளும் சூப்பர் ஓவர் விளையாடும். அதற்கும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்ற அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

rain

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்கும். ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 10 வெற்றி, 4 தோல்வி என 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றி, 5 தோல்வி என 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல், கோப்பையை சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.