ஹர்திக் பாண்டியா எக்ஸ் தளம்
T20

இலங்கை டூர்| ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏன்? பின்னணியில் இருந்தது யார்?

Prakash J

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ஆம் தேதி வரை, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. இதற்கான அணிகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியும், ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா

இதில் ஹர்திக் பாண்டியா டி20க்கு தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் கழட்டி விடப்பட்டு சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன்ஷிப் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுப்மல் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஹர்திக் பாண்டியா ஒரு வீரராகவே மட்டும் இடம்பெற்றுள்ளார். இதனால் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படாதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: போலிச் சான்றிதழ் விவகாரம் | பெண் IAS பூஜா கேட்கர் மீது வழக்குப்பதிவு.. கிடுகிடுக்கும் விசாரணை!

இதன் பின்னணியில் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதும், அதற்கு மூலக் காரணம் ஹர்திக் பாண்டியாவின் குடும்பப் பின்னணி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும், ’இனி தாங்கள் இருவரும் பிரிந்து வாழப்போகிறோம்’ என ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த விஷயம், இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கும் வரை பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவர்களது பிரிவு குறித்து பிசிசிஐ அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டாம் என பிசிசிஐ மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

ஹர்திக் பாண்டியா கடந்த ஆறு மாதங்களாகவே மனவேதனையில் இருந்து வருகிறார். முதலில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை. அதனால், ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இல்லை. அடுத்த அவரது தனிப்பட்ட வாழ்விலும் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் சோகத்தில் இருந்தார்.

தற்போது விவாகரத்தும் பெற்று இருக்கிறார். தற்போது ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்வு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இதை உணர்ந்து கம்பீர் மற்றும் பிசிசிஐ தேர்வுக் குழு இணைந்து அவருக்கு அதிக சுமை அளிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில்தான் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!