ஷபாலி வர்மா, ஷேவாக் எக்ஸ் தளம்
T20

200 ரன்னை நெருங்கும் போதும் சிக்ஸர் விளாசல்! அச்சு அலசல் சேவாக் ஆட்டத்தை நினைவூட்டிய ஷபாலி வர்மா!

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க மகளிர் அணி, நம் நாட்டு மகளிர் அணியுடன் கூடிய கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. இந்த ஆட்டத்தில் முதல் நாளில் பதிவு செய்யப்பட்ட ஸ்கோரே (525/4), மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதன்மூலம், 89 ஆண்டு சாதனையை இந்தியா முறியடித்தது.

பின்னர் மறுநாள் தொடர்ந்து ஆடிய இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன்மூலம் வேறு எந்த அணியும் இதுவரை 600 ரன்களைக் கடந்ததில்லை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதையடுத்து, பேட்டிங் செய்துவரும் தென்னாப்ரிக்க மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. அதாவது 367 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதையும் படிக்க: T20WC Final |”இந்த ஃபைனலிலும் தோற்றால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார்” - கங்குலி

முன்னதாக, இந்தப் போட்டியில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 194 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருந்தார். 23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசிய அவர், இறுதியில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், மகளிர் டெஸ்ட்டில் 2வது இரட்டைச் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பட்டியலிலும் இணைந்தார். மேலும், இந்தப் போட்டியில் அவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்தைப் பிரதிபலித்ததாகப் பலரும் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். தவிர, அவர்கள் சொல்வதில் நூறு சதவிகிதம் உண்மை அடங்கியுள்ளது.

ஆம், கடந்த 2008ஆம் ஆண்டு இதே தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீரேந்திர ஷேவாக் 194 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருந்தார். அதுவும் இதே சேப்பாக்கம் மைதானத்தில்தான். தவிர, 190 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்தார். இதையேதான் ஷபாலி வர்மாவும் தற்போது செய்துள்ளார். அதே சேப்பாக்கம் மைதானத்தில் 194 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததுடன், 190 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்திருந்தார். அதனால் இருவரையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோன்று நடப்பு மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டியின் ரன்களும், நடப்பு ஆடவர் ஐபிஎல் இறுதிப்போட்டியின் ரன்களும் ஒரே மாதிரி குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!