கபில்தேவ், ஸ்ரீசந்த், சூர்யகுமார் யாதவ் எக்ஸ் தளம்
T20

கபில், ஸ்ரீசாந்த், SKY.. 3 கேட்ச்களால் வசமான 3 உலகக்கோப்பைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்!

Prakash J

விராட் கோலியின் அரைசதம், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சு, சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆகியவற்றால் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் உச்சி முகர்ந்தது. இந்த மகிழ்ச்சியை, உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி கைப்பற்றிய ஒவ்வொரு உலகக்கோப்பைகளுக்குப் பின்னாலும் ஒரு கேட்ச் விஷயம் ஒளிந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மேற்கிந்திய தீவு அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை, அப்போதைய கேப்டன் கபில்தேவ் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். அந்த கேட்ச்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்வதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது.

இதையும் படிக்க: ’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!

அதன்பிறகு, 2007-ஆம் தோனி தலைமையிலான இந்திய இளம்படை டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானைச் சந்தித்தது. முதலில் களமிறங்கிய இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் விளையாடியது. இந்தியாவின் அபார பந்துவீச்சால் 19 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 141 ரன்களை சேர்த்திருந்தது.

கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜோகிந்தர் சர்மா பந்து வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஜோகிந்திர் சர்மா ஃபுல் டாஸ் ஆக வீச, அதை ஸ்கூப் ஷாட் முறையில் அடித்தார் மிஸ்பா. ஏற்கெனவே மிஸ்பாவின் வியூகத்தை கணித்திருந்த தோனி, ஷார்ட் ஃபைன் லெக் பகுதியில் ஸ்ரீசாந்தை நிற்க வைத்திருந்தார். அவரும் அபாரமாக அந்த கேட்சை பிடிக்க உலகக்கோப்பை இந்தியா வசமானது.

இதையும் படிக்க: ”பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது” - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய மஹுவா மொய்த்ரா!

அடுத்து, தற்போது நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் , கடைசி 1 ஓவரில், 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென்னாப்ரிக்கா தள்ளப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் பந்திலேயே மில்லரை வெளியேற்றினார். அந்த பந்தை பவுண்டரி எல்லைக்குத் தூக்கியடித்தபோது, சூர்யகுமார் யாதவ் அதை லாகவமாக கேட்ச் செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததுடன், மீண்டும் உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார்.

ஆக, இந்த மூன்று கேட்ச்களும் உலகக்கோப்பையில் முக்கிய இடம்பிடித்திருப்பதாக இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: T20WC 2024 | உலகக்கோப்பையுடன் ஓய்வு... சத்தமின்றி 7 சாதனைகளைப் படைத்த ரோகித் சர்மா!