bumrah - rohit - pant - hardik cricinfo
T20

“AllOut பண்ணா தான் வெல்ல முடியும்..” - பொதுவான மரபை உடைத்த ரோகித்-பும்ரா! இந்தியா வென்றது எப்படி?

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெறும் 119 ரன்களை மட்டுமே அடித்த போதிலும், பாகிஸ்தான் அணியால் அந்த இலக்கை எட்டமுடியவில்லை. 119 ரன்களை விரட்டிய சேஸிங்கில் 72 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் என நல்ல நிலைமையில் இருந்தபோதும், பாகிஸ்தானால் வெற்றியின் லைனை தாண்ட முடியவில்லை. போட்டியில் எப்படியும் இந்தியா தோற்றுவிடும் என டிவி, மொபைலை அனைத்துவிட்டு சென்ற ரசிகர்களுக்கு மறுநாள் காலையில் ஆச்சரியமும், அதிச்சியும் காத்திருந்தது.

ind vs pak

இந்நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி பல கிரிக்கெட் வீரர்களிடமும், “இந்தியா எந்த இடத்தில் வென்றது? எதனால் வென்றது?” என்ற விவாதம் தற்போது அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.

நீங்க AllOut பண்ணா தான் வெல்ல முடியும்..

டி20 கிரிக்கெட்டில் குறைவான டோட்டலை ஒரு அணி எடுத்துவிட்டால் “அவ்ளோ தான் முடிஞ்சு போச்சு, இவ்வளவு குறைவான ரன்களை எல்லாம் எதிரணி ஈசியா அடிச்சிடுவாங்க, நீங்க வெற்றிபெற எதிரணியை ஆல்அவுட் செய்வது மட்டும் தான் ஒரே வழி” என்ற மரபு காலங்காலமாக பொதுவெளியில் சொல்லப்பட்டுவருகிறது.

இதே கருத்தை தான் நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போதும் பலபேர் முன்வைத்தனர். 119 ரன்களை அடித்த இந்திய அணி வெல்லவேண்டுமானால், “பாகிஸ்தானை ஆல்அவுட் செய்தால் மட்டுமே முடியும், இல்லையென்றால் இவ்வளவு குறைவான ரன்களை டிஃபெண்ட் செய்யமுடியாது” என்ற கருத்து சொல்லப்பட்டது.

bumrah

ஆனால் அதற்கு மாறாக இந்திய அணி பாகிஸ்தானை ஆல்அவுட் செய்யும் முயற்சிக்கு செல்லாமல், அவர்களை டிஃபண்ட் செய்ய முடிவுசெய்து அதில் வெற்றியும் கண்டது. 119 ரன் சேஸிங்கில் 7 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மரபை உடைத்த ரோகித்-பும்ரா..

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ரன்களை டிஃபெண்ட் செய்து கோப்பைகளை வென்ற கேப்டனாக ரோகித் சர்மா மட்டுமே இருந்துவருகிறார். இந்த மேஜிக்கை அவர் பல ஐபிஎல் போட்டிகளில் செய்து காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக 2019 சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியை சொல்லலாம்.

ரோகித் சர்மா 4 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ‘129 முதல் 149 ரன்கள் வரையிலான’ டோட்டலை டிஃபண்ட் செய்து வெற்றிபெற்ற ஆட்டங்களில் அங்கம் வகித்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஒரு போட்டியில் வீரராகவும், மும்பை அணியில் 3 முறை கேப்டனாகவும் அதை செய்துள்ளார். அதில் 3 போட்டிகளில் அவரின் அணி ஆரம்ப விக்கெட்டுகளுக்கு செல்லாமல் வெற்றிக்காக கடைசிவரை காத்திருந்தது.

rohit sharma

களத்தில் ரோகித் செய்தது என்ன? - ரோகித் குறைவான டோட்டலை எப்படி டிஃபண்ட் செய்யவேண்டும் என்ற தன்னுடைய அனுபவத்தை களத்தில் சாதுர்யமாக வெளிப்படுத்தினார். மற்ற கேப்டன்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய மெயின்பவுலரை முன்னரே அதிகமுறை பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா பும்ராவின் ஓவர்களில் விக்கெட்டுகளைத் தேட விரும்பவில்லை. பாகிஸ்தான் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் செய்து 72 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருந்தபோதும், பும்ராவை கொண்டுவரவில்லை. டர்னிங் டிராக்களில் என்னசெய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அவர் ஆட்டத்தில் நீண்டநேரம் நிலைத்திருக்க விரும்பினார்.

ind vs pak

பும்ரா செய்தது என்ன? - பும்ராவும் ரோகித் சர்மாவுடன் அத்தகைய குறைவான ரன்கள் கொண்ட ஆட்டங்களில் இருந்துள்ளதால், அவரும் தன்னுடைய அனுபவத்தை சரியாக பயன்படுத்தினார். அவர் பந்துவீச வரும்போது அந்தளவு டர்னிங் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், சரியான ஏரியாக்களில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் வீசுவதில் கவனம் செலுத்தினார். மாறாக பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் விக்கெட்டுக்கு செல்லலாம் என அவர் ஆக்ரோசமாக செல்லவில்லை.

bumrah

போட்டியின் முடிவுக்கு பிறகு பேசிய பும்ரா, “ஆடுகளம் உங்களுக்கு உதவியாக இருக்கும்போது கூட, நீங்கள் அழுத்தத்தை அதிகமாக உணரமுடியும். மேலும் விக்கெட் வேண்டும் என மேஜிக் டெலிவரியை வீசுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அது உங்களுக்கு பாதகமாக சென்றுவிடும். அதனால் நான் அதைச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன், நாங்கள் பந்துவீசவரும்போது ஸ்விங்கும் பவுன்சர்களும் குறைந்துவிட்டன. எனவே, நான் களத்தில் துல்லியமாக பந்துவீச முடிவுசெய்தேன், அவர்களுக்கு இலக்கு எவ்வளவு என்பது தெரியும் என்பதால் நாங்கள் விக்கெட்டை தேடிசெல்லாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் ரன்களை விட்டுக்கொடுக்காமல் பெரிய எல்லைகளை சார்ந்து பந்துவீசும் முடிவுக்கு சென்றோம், அதையே நாங்கள் செய்து கொண்டிருந்ததால் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது" என்று கூறியிருந்தார்.

பண்ட், ஹர்திக் பாண்டியா செய்த மேஜிக்..

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் பண்ட் தான் என்று கும்ப்ளே கூறியுள்ளார். பண்ட் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை, ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பண்ட் மட்டுமே சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.

rishabh pant

முதலிரண்டு ஷாட்களை விளையாடும்போது பந்துகள் எட்ஜ் ஆகி கேட்ச்சிற்கு சென்றபிறகு, ஆடுகளம் நட்பாக இல்லை என்பதையும், பவுலர்களுக்கு நேரெதிராக அடிக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்ட பண்ட், பவுலர்கள் எதிர்ப்பார்க்காத இடங்களில் ரன்களை எடுத்துவர முடிவுசெய்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப், 140-க்கு மேல் வீசும் பவுலர்களுக்கு எதிராக அதை தைரியமாக செல்லும் ஒரு பேட்ஸ்மேனாக பண்ட் களத்தில் இருந்தார். அவர் பவுலர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார், அவர் அடித்த ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்களில் 12 ரன்கள் இந்தியாவிற்கு கிடைத்தது. பண்ட் செய்ததை செய்ய பாகிஸ்தானில் பேட்டர்கள் இல்லாததே அவர்களின் தோல்விக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.

hardik pandya

ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரையில், அவர் தன்னுடைய பவுலிங்கை எளிதாக வைத்துக்கொண்டார். அவரும் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதால், விக்கெட்டுகளுக்கு செல்லவில்லை. மாறாக அவர் பேட்ஸ்மேன்களின் ஃபுட்ஒர்க்கிற்கு தகுந்தார் போல் பந்துவீசி சர்ப்ரைஸ் செய்தார். அதனால் அவரால் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.

ind vs pak

நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி நல்ல பேலன்ஸ் உள்ள அணியாக இருந்துவருகிறது. எப்போதும் போல இல்லாமல், நாக் அவுட் போட்டிகளில் இப்படியான மேட்ச் வின்னர்கள் கிடைத்தால் இந்தமுறை இந்திய அணியின் கைகளில் கோப்பை சென்று உட்காரும்!