sanju samson x
T20

தொடர்ந்து பறந்த 5 சிக்சர்கள்; முதல் டி20 சதமடித்த சஞ்சு சாம்சன்! 297 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய முன்னிலை பெற்றுள்ளது.

ind vs ban

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையெயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி இன்று ஹைத்ராபாத்தில் நடக்கிறது.

3வது போட்டிக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்

தொடர்ச்சியாக பறந்த 5 சிக்சர்கள்.. சதமடித்த சஞ்சு!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 4 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்குபிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

தொடக்கத்தில் அதிரடிக்கு பிள்ளையார் சுழி போட்ட சஞ்சு சாம்சன், ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன் வெறும் 40 பந்துகளில் தன்னுடைய முதல் டி20 சதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும்தான் போட்டியே என்பதுபோல் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ், 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்தார். சஞ்சு சாம்சன் 111 ரன்கள் அடித்து வெளியேற, தொடர்ந்து களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியைத்தொடர்ந்தார்.

250 ரன்கள் குவித்த இந்தியா..

14 ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்களை எட்டிய நிலையில், 300 ரன்கள் என்ற இமாலய ரன்னை இந்தியா எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் வெளியேறினார்.

அதற்குபிறகு எப்படி ரன்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர்.

பராக் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் என அடித்து அசத்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 297 ரன்களை எட்டி வரலாறு படைத்தது.

297 ரன்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டியது இந்திய அணி. முதல் இடத்தில் 314 ரன்களுடன் நேபாள் நீடிக்கிறது.