கெளதம் காம்பீர் ட்விட்டர்
T20

”நீங்க அத செஞ்சா தான் என் காதல சொல்லுவேன்” - பெண் ரசிகை வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய காம்பீர்!

Prakash J

பாஜகவின் எம்பியாக வலம் வந்த முன்னாள் வீரர் கெளதம் காம்பீர், இனி மீண்டும் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த இருப்பதால் அரசியலில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக கட்சி மேலிடத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியின் ஆலோசகரான கெளதம் காம்பீர், சொல்லிவைத்தாற்போலவே, அந்த அணியை தற்போது முதல் இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளார்.

அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடம்பிடிக்கக் காரணம், அவர் வகுத்துத் தந்த யுக்திகள்தான் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நடப்பு ஐபிஎல் கோப்பையை அந்த அணி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிக சந்தோஷத்தில் உள்ளார் கெளதம் காம்பீர்.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

இந்த நிலையில், எப்போதும் ஒரே ரியாக்‌ஷனைக் கொடுக்கும் காம்பீரின் முகத்தை அவரது ரசிகை ஒருவர் கண்டுபிடித்தார். அதாவது, அவர் எப்போதும் சிரிக்காமல் இருப்பதை வைத்து, ”காம்பீர் சிரிக்கும்வரை நான் விரும்பும் நபரிடம் என் காதலை தெரிவிக்க மாட்டேன்” என ஒரு பதாகையை ஏந்தியபடி மைதானத்தில் காட்டினார். அந்த ரசிகையின் பதாகையைப் படம்பிடித்த கேமராக்கள், அதை இணையத்தில் வைரலாக்கின. தற்போது, இந்தப் பதாகையைப் பார்த்த காம்பீரும் அந்த ரசிகைக்குப் பதில் அளித்துள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தான் சிரிக்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு, ”இதோ நான் சிரித்துவிட்டேன்” என்பதுபோல் பதில் அளித்திருக்கிறார். காம்பீரின் இந்தப் பதிவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ”காம்பீர் சிரித்ததால் இனி அந்தப் பெண், தான் விரும்பும் நபரிடம் போய் காதலைச் சொல்வாரா” எனவும், ”காம்பீரையே அந்த ரசிகை சிரிக்க வைத்துவிட்டதால் அவருக்கும் ஏதேனும் விருது வழங்க வேண்டும்” எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ”என்னை நீங்கள் பார்க்கவே முடியாது” - ஓய்வு குறித்து விராட் கோலி!