Dindigul Dragons pt desk
T20

ஹாட்ரிக் அரைசதம்.. அஸ்வின் மிரட்டல்.. முதல்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை முத்தமிட்ட திண்டுக்கல் அணி!

webteam

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்:

திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு வீரரும் 30 ரன்கள் கூட எட்டவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக ராம் அர்விந்த் 27, அதீக் உர் ரஹ்மான் 25 ரன்கள் எடுத்தனர். சாய் சுதர்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

Ashwin

திண்டுக்கல் அணியில் விக்னேஷ் புதுர் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை சாய்த்தார். சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் விக்கெட் எதும் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

பேட்டிங்கில் மிரட்டிய அஸ்வின்!

இதனையடுத்து, 130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் விமல் குமார் 9, சிவம் சிங் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, அஸ்வின் உடன் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிதானமாக விளையாடிய போதும் 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் அஸ்வின். இருவரது ஆட்டத்தால் வெற்றியை நோக்கி சென்றது.

TNPL Champions

திண்டுக்கல் அணி. இந்திரஜித் 32 ரன்களிலும், அஸ்வின் 52 (46) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சரத் குமார் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டர்களுடன் 27 ரன்கள் விளாசி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியது.

அஸ்வினிடம் கோப்பையை வழங்கிய ராகுல் டிராவிட்

முன்னதாக எலிமினேட்டர் சுற்றில் 57 (35), இரண்டாவது குலாலிபஃர் சுற்றில் 69 (30) ரன்கள் எடுத்து அசத்திய அஸ்வின் இறுதிப் போட்டியிலும் அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார். தொடர்ச்சியாக மூன்று அரைசதம் விளாசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள அஸ்வின், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். டிஎன்பிஎல் தொடரை பொறுத்தவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நான்கு முறையும், லைகா கோவை கிங்ஸ் இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

Ashwin

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு டிஎன்பிஎல் கோப்பையும் 50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.