டி20 உலகக்கோப்பை pt
T20

விராட் கோலி குறித்த கேள்வி... சிரித்தபடியே பதில்கூறிய ரோகித், அஜித் அகர்கர்!

PT WEB

ஜூன் ஒன்றாம் தேதி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள் தேர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ரோகித் சர்மா, “சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக நிறைய ஆலோசனை மேற்கொண்டோம். எதற்காக 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம் என தற்போது கூறமுடியாது. அதே நேரத்தில் அமெரிக்கா சென்றதும் அதற்கான விளக்கத்தை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், கேப்டன்சி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கும் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார். அதில், “இது வாழ்வின் ஒரு பகுதி. எல்லாமே நாம் நினைப்பது போன்று நடக்காது. இது சிறந்த அனுபவம். கேப்டனாக எனது கிரிக்கெட் வாழ்க்கையை நான் தொடங்கவில்லை. பல்வேறு கேப்டன்களின் தலைமையில் நான் விளையாடி இருக்கிறேன்.

இதில் எனக்கு வித்தியாசமோ, புதுமையோ இல்லை. ஒரு வீரராக அணிக்கு என்ன தேவையோ, அதனை எப்போதும் சிறப்பாக செய்வேன்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, 15 பேர் கொண்ட அணியில் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்படாதது மிகவும் கடினமான முடிவு என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறினார். மேலும், கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்படாதது தொடர்பான கேள்விக்கும் அகர்கர் பதில் அளித்தார்.

அதில், “கே.எல்.ராகுல் மிகச்சிறந்த வீரர் என்பதை அனைவரும் அறிவோம். மிடில் ஆர்டரில் விளையாடும் வீரரை தேடினோம். ஆனால், ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடி வருகிறார்.

சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார் என எண்ணினோம். அதேபோல், டெல்லி அணியில் NO.5 இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ராகுல் சிறந்த வீரரா?, இந்த வீரர்கள் சிறந்தவர்களா? என்பது கேள்வியல்ல. மிடில் ஆர்டரில் யார் தேவை என்பதை பொறுத்து முடிவு செய்தோம்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, டி20 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “அதுபற்றி கவலையில்லை” என இருவரும் சிரித்தபடி பதில் அளித்தனர்.