சுமித் அண்டில் எக்ஸ் தளம்
விளையாட்டு

பாராலிம்பிக்ஸில் | ஈட்டி எறிதலில் சரித்திரம் படைத்த சுமித் அண்டில்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தவற விட்ட சாதனையை, பாராலிம்பிக்ஸில் செய்து சுமித் அண்டில் சரித்திரம் படைத்துள்ளார்.

PT WEB

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 5 நாளில் ஈட்டி எறிதல் எப் 64 பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுமித் அண்டில், 70.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.

சுமித் அண்டில்

டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வென்றிருந்த சுமித் அண்டில், அப்போது 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்திருந்தார். அதுவே இதுவரை பாராலிம்பிக்ஸ் சாதனையாக இருந்து வந்தது. அதனை இந்த இறுதி போட்டியில் 3 முறை சுமித் அண்டில் முறியடித்துள்ளார்.

முதல் முயற்சியிலே 69.11 மீட்டருக்கு ஈட்டி எறிந்த அவர், 2 முயற்சியில் 70.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். தனது 5வது முயற்சியில், 69.04 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 70.59 மீட்டருக்கு அவர் ஈட்டி எறிந்தது, புதிய பாராலிம்பிக் சாதனையாக மாறியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்று தந்துள்ளது. இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையும், சுமித் அண்டிலுக்கு சொந்தமாகியுள்ளது.

சுமித் அண்டில்

அவனி லேகராவிற்கு பின்னர், தொடர்ந்து 2 பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையும், அவர் வசமாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வெல்லும் வாய்ப்பை நீரஜ் சோப்ரா தவறவிட்ட நிலையில், சுமித் அண்டில் பாராலிம்பிக்ஸில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.