விளையாட்டு

கார் மோதி முதியவர் உயிரிழப்பு : இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ் ஓட்டிச்சென்ற கார் மோதி 64 வயது முதியவர் உயிரிழந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் கடந்த புதன் கிழமை நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்றார். இந்நிலையில் கொழும்புவின் புறநகர் பகுதிக்கு நேற்று மாலை சென்ற மென்டிஸ் தனது காரை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது.

அப்போது சைக்கிளில் வந்த 64 வயது முதியவரின் மீது மென்டிஸின் கார் மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட முதியவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே உயிரிழந்தார். இதையடுத்து மென்டிஸை இலங்கை போலீசார் கைது செய்தனர். அவரை 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தின்போது குசால் மென்டிஸ் மது அருந்தியிருந்தாரா ? என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அணியில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மென்டிஸ் 2995 ரன்களும், 76 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 2167 ரன்களையும் எடுத்துள்ளார். அத்துடன் 26 டி20 போட்டிகளில் 484 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 196, ஒருநாள் போட்டியில் 119 மற்றும் டி20 போட்டியில் 79 ரன்களை எடுத்துள்ளார். இவர் இலங்கை அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.