விளையாட்டு

பயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் ?

webteam

பாகிஸ்தான் செல்ல இருக்கும் தங்கள் அணிக்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் இல்லாமல், லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் செல்ல இருக்கும் தங்கள் அணிக்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பத்தகுந்த வட்டார ங்கள் தகவல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிலைமை குறித்து ஆராய இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் தொடர் நடப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால், வழக்கம் போல ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடம் மாற்றப்படும் என்று தெரிகிறது.