விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!

webteam

தம்புல்லாவில் நாளை தொடங்கும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில், குறைந்தது 2 போட்டிகளிலாவது வெற்றிபெற்றால் மட்டுமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி முதல் 5 இடங்களில் தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இலங்கை அணி 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் இருக்கின்றன. தம்புல்லாவில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் 3-வது இடத்தை தக்கவைக்க முடியும். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். 

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும். எஞ்சிய இரு இடத்திற்கு தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

அந்த வகையில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளி எண்ணிக்கை 90-ஆக உயர்ந்து 8-வது இடத்தில் நீடிக்கும். உலக கோப்பை போட்டிக்கும் நேரடி தகுதி பெற்று விடும். இதன் காரணமாக நாளை தொடங்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு, இலங்கை அணி கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது.