விளையாட்டு

வெற்றி ரகசியம் சொன்ன தவான்: 3வது போட்டியில் முந்துவார்களா?

webteam

இந்திய அணியின் வெற்றி ரகசியத்தை சிக்கர் தவான் கூறியுள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால், 3வது போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இருப்பினும் இந்திய அணியும் வெற்றியை தொடர வேண்டுமென தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் வெற்றி ரகசியம் குறித்து கூறியுள்ள சிக்கர் தவான், “தென்னாப்பிரிக்காவுடனான 2 போட்டிகள் மட்டுமின்றி, முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராகவும் இந்தியா வெற்றி பெற்றதற்கு காரணம் முதல் 10 ஓவர்கள் ஆட்டம்தான். கடந்த பல போட்டிகளாக, முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு மேல் கூடுதலாக விக்கெட்டை பறி கொடுக்காமல், சீரான ரன்களை எடுத்து வருகிறது. இதனால் எந்த அணியின் பந்து வீச்சையும் இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடிகிறது. தென்னாப்பிரிக்க வீரர்கள் திறமையுடன் பந்து வீசுகின்றனர். இருப்பினும் முதல் 10 ஓவர்கள் நாங்கள் நிலைத்து விளையாடுவதால், அதன்பிறகு பந்துவீச்சு எளிதாக மாறிவிடுகிறது. இதேபோன்று விளையாடினால் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற முடியும்” என்றார்.