வாடியா, ஷாருக் கான் pt web
விளையாட்டு

ஐபிஎல் ஏலம்| ஷாருக்கான், பஞ்சாப் உரிமையாளர் இடையே சூடான விவாதம்! பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்த மெகா ஏலம் தொடர்பான விவாதத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான், மெகா ஏலம் தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Angeshwar G

மும்பையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

IPL Mini Auction

அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புதன்கிழமை இரவு பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் கூடி, அடுத்த சீசனுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிரண் குமார் கிராந்தி, சென்னை சூப்பர் கிங்ஸின் ரூபா குருநாத், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சஞ்சீவ் கோயங்கா, சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் காவ்யா மாறன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மனோஜ் படேலே போன்றோர் கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் என சிலர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பல்வேறு தலைப்புகள் குறித்தான ஆலோசனைகள் திட்டமிடப்பட்ட நிலையில், முக்கியமானதாக பார்க்கப்பட்டது வீரர்களை தக்கவைப்பது தொடர்பான ஏல விவகாரம்தான்.

ஷாருக்கானுக்கு ஆதரவாக காவ்யா மாறன்

இந்த மெகா ஏலம் தொடர்பான விவாதத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான், மெகா ஏலம் தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாருக் கான் வீரர்களை தக்கவைப்பதற்கான தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா வீரர்களை தக்கவைப்பதற்கான யோசனையில் உடன்படவில்லை. ஒவ்வொரு தரப்பிலும் குறைவான வீரர்களே தக்கவைக்கப்பட வேண்டும் என்ற வாடியாவின் கருத்துக்கு ஷாருக்கான் உடன்படவில்லை. இதன் காரணமாக இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக Cricbuzz வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

அணியை கட்டமைக்க அதிகமான காலம் எடுக்கும் என தெரிவித்த காவ்யா மாறன் ஷாருக் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

அதேபோல் இம்பேக்ட் ப்ளேயர் விதியை கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தனது எதிர்ப்பினை தெரிவித்தது. ஆல் ரவுண்டர்களின் வளர்ச்சியை இந்த விதி தடுக்கும் என்றும் வாதிட்டது.

வெளிநாட்டு வீரர்களின் இடையூறு!

இந்த கூட்டத்திற்கெல்லாம் முன்பாக, அணிகள் Right to Match (RTM) முறையை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகிவிட்டு சொந்த காரணங்களுக்காக விலகும் வெளிநாட்டு வீரர்கள், அணியின் திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதுகுறித்து அணியின் உரிமையாளர்கள் விவாதிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

காவ்யா மாறன்

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. ஆதரவு தெரிவித்த காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் இறுதிப் போட்டிவரை சென்றது. மாறாக, பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 14 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

மெகா ஏலம்: யாருக்கு பலம், யாருக்கு நஷ்டம்

மெகா ஏலத்தை நடத்தாமல் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்கு சாதகமாக அமையும். ஆனால் கோப்பை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் போன்ற அணிகளில் வலுவான வீரர்கள் இல்லாததால் அவர் ஏலத்திற்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல்

ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழுவிற்கு எடுத்துச் சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விதிகள் குறித்தான தெளிவை பிசிசிஐ வழங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.