விளையாட்டு உலகின் மிகப் பிரபலமான தம்பதியினரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இந்தியாவிற்காக ஏகப்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாகிஸ்தானை சேர்ந்த வீரரை கரம்பிடித்த போதிலும், திருமணத்திற்கு பின்பும் அவர் இந்தியாவுக்காக தான் விளையாடி வந்தார்.
மகிழ்ச்சியாக சென்ற இவர்களது இல்லற வாழ்வில் சானியா மிர்சா கர்ப்பமானார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதியினர் தங்களுக்கு வரப்போகும் புதிய வரவு குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். தொடர்ச்சியாக கர்ப்பமாக இருந்த சானியா மிர்சாவின் படங்களும் அவ்வப்போது வெளியாகின. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “ இதனை அறிவிப்பதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். ஆம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. எப்போதும் போல என் மனைவி சானியா மிர்சா நன்றாகவும், ஸ்ட்ராங்காகவும் உள்ளார். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக சில பிரபலங்கள் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிவிக்கும் நேரத்தில் அவர்களின் குழந்தை புகைப்படமும் வெளியாகிவிடும். ஆனால் சானியா- சோயிப் மாலிக்கின் குழந்தை புகைப்படம் இன்னும் வெளியாகவில்லை. எனவே குழந்தையின் புகைப்படத்தை காண இரு நாட்டு பிரபலங்களின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அத்துடன் தங்களது வாழ்த்துகளையும் அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
Excited to announce: Its a boy, and my girl is doing great and keeping strong as usual #Alhumdulilah. Thank you for the wishes and Duas, we are humbled