விளையாட்டு

ஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு

rajakannan

ஆஸ்திரேலிய பேட் தயாரிப்பு நிறுவனம் மீது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ராயல்டி தொகை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்தின் கடந்த 2016ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம் ஒன்றினை போட்டுள்ளார். அதாவது, அந்த நிறுவனத்தின் பொருட்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அதன்படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்த நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும். 

ஆனால், 2018ம் ஆண்டு விளம்பரத்திற்காக தொகையை அந்நிறுவனம் கொடுக்கவில்லை. அதனால், உரிய தொகையை வழங்குமாறு அந்நிறுவனத்திற்கு சச்சின் கடிதம் எழுதினார். ஆனால், பதில் ஏதும் வரவில்லை. அதனால், அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அவர் முடித்துக் கொண்டார். மேலும், தன்னுடைய பெயர், படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். 

இதனையடுத்து, ராயல்டி தொகை வழங்க உத்தரவிடக் கோரி ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் சச்சின் டெண்டுல்கர் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.