விளையாட்டு

புதிய மைல்கல்-ஐ எட்ட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு

rajakannan

டி20 போட்டிகளில் கேப்டன் விராத் கோலிக்கு பிறகு இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவதற்கு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. 

இந்த டி20 போட்டியில் 15 ரன்கள் எடுப்பதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு பிறகு 1500 ரன்கள் எட்டிய இந்தியர் என்ற மைல்கல்லை எட்ட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. இதுவரை 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 1485 ரன்கள் குவித்துள்ளார். 12 அரைசதமும், ஒரு சதமும் அவர் அடித்துள்ளார். 

இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் விராத் கோலி 55 போட்டிகளில் மட்டுமே விளையாடி 1956 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 18 அரைசதம் அடித்துள்ளார். சதம் இன்னும் அடிக்கவில்லை. நியூசிலாந்து வீரர் மெக்கல்லாம் 70 போட்டிகளில் விளையாடி 2,140 ரன்கள் எடுத்துள்ளதே சர்வதேச அளவில் அதிகம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரெய்னா 65 போட்டிகளில் விளையாடி 1307 ரன்களும், தோனி 83 போட்டிகளில் 1281 ரன்களும் எடுத்துள்ளனர்.