விளையாட்டு

"எனக்கு எல்லாமே என் மனைவிதான்" நெகிழ்ந்து பேசிய ரோகித் சர்மா !

jagadeesh

தன் மனைவிதான் தனக்கு எல்லாமே அவர்தான் தன் பலமே என்று ரோகித் சர்மா உருக்கமாக நெகிழ்ந்து பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். இந்நிலையில் "இந்தியா டுடே" இணையதளம் மூலம் ரோகித் சர்மாவிடம் நேர்காணல் நடத்தியது. அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது தன் மனைவி ரித்திகா குறித்து பேசிய ரோகித் "எனக்கு எப்போதும் பக்கபலமாக அவர் இருக்கிறார். எனக்கு எப்போதும் உறுதுணையாகவும் இருக்கிறார். அது நான் ஆடுகளத்தின் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி. ரித்திகா எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே நினைப்பார். அவர் எப்போதும் என்னுடன் இருப்பதால்தான் என்னால் சாதனைகளை மிக எளிதாக செய்ய முடிகிறது" என்றார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த ரோகித் சர்மா " 2019 உலகக் கோப்பை விளையாடும்போது என் ஒட்டுமொத்த குடும்பமும் இங்கிலாந்தில் இருந்தது. அது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணமாக இருந்தது. இறுதிப் போட்டிக்குதான் நாங்கள் செல்லவில்லையே தவிர, அதுவரை எல்லாமே சரியாக நிகழ்ந்தது. நான் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தற்கு காரணமே மனைவி ரித்திகாவும், மகளும்தான். அவர்கள் என் கூடவே இருந்ததால் நான் மகிழ்ச்சியாக விளையாடினேன்" என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கும் - ரித்திகாவுக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்தத் தம்பதியினருக்கு 2018, டிசம்பர் 31 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.