விளையாட்டு

முகக்கவசம் அணியாததால் தடுத்து நிறுத்திய போலீஸ்: வாக்குவாதம் செய்த ஜடேஜாவின் மனைவி!

kaleelrahman

முகக்கவசம் அணியாமல் காரில் பயணித்த ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்


முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவியை குஜராத்தின் ராஜ்கோட்டில் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். அவருடன் ஜடேஜா மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த அன்று இரவு கிரிக்கெட் வீரர் ஜடேஜா காரை ஓட்டி வந்தார். அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி ரிவாபா முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார் என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.


முகக்கவசம் அணியாமல் இருந்ததை கவனித்த கிசன்பாரா சௌக்கில் தனது காரை தடுத்து நிறுத்தியபோது கிரிக்கெட் வீரரின் மனைவி, காவலர் சோனல் கோசாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று துணை போலீஸ் கமிஷனர்  தெரிவித்துள்ளார்


எங்கள் முதற்கட்ட விசாரணையில் ரிவாபா ஜடேஜா முகக்கவசம் அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்துள்ள டி.ஜி.பி, ''இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவலர் கோசாய் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரைமணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது நன்றாக இருக்கிறார். இதுவரை எந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை'' என்று தெரிவித்தார்