விளையாட்டு

விளம்பர பலகையில் விழுந்தார்: இலங்கை கிரிக்கெட் வீரர் படுகாயம்!

webteam

ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது இலங்கை கிரிக்கெட் வீரர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸில் பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று அதிகாலை 9 விக்கெட்டை இழந்து 88 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது. 

அப்போது தில்ரூவான் பெரேரா வீசிய பந்தை தூக்கி அடித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல். பந்து எல்லைக் கோட்டை தாண்டிச் சென்றது. பீல்டிங் செய்துகொண்டிருந்த குசால் பெரேரா அதை பிடிக்க ஓடினார். ஆனால் எதிர்பாராதவிதமாக விளம்பர பலகை மீது பயங்கரமாக மோதி னார். இதில் அவர் நெஞ்சில் பலத்தக் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த அவர், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உதவி கோரினார். 

இதையடுத்து இலங்கை அணி நிர்வாகத்தினர் மற்றும் வீரர்கள் ஓடி வந்தனர். அவர் படுகாயம் அடைந்திருப்பது தெரிந்ததும் ஆம்புலன்ஸை வரவழைக்கப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அவர் கண்காணிப்பில்தான் உள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.