விளையாட்டு

எங்கள் வீரர்களை எப்படி பாராட்டுவது? பாக்.கேப்டன் பெருமிதம்

webteam

உலக லெவனுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணியும் உலக லெவன் அணியும் மோதின. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2 வது ஆட்டத்தில் உலக லெவனும் வெற்றி பெற்றது. 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அகமது ஷேசாத் 89 ரன்களும் பாபர் அசாம் 48 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய உலக லெவன் அணியால் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் டேவிட் மில்லர், பெரேரா ஆகியோர் தலா 32 ரன்கள் எடுத்தனர். 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி , தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமது ஷேசாத் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாபர் அசாம் தொடர் நாயகன் விருது பெற்றார். 

வெற்றிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ‘எங்கள் அணி வீரர்களை எப்படி பாராட்ட என்று தெரியவில்லை. அவர்கள் ரொட்டி, சாப்பாட்டை தவிர்த்து  கடுமையாக உழைத்தார்கள். பயிற்சியாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். 2-வது போட்டியில் தோற்றோம். இப்போது மீண்டும் வந்து விட்டோம். இது இளம் அணி. எங்கள் வெற்றி தொடரும்’ என்றார்.