விளையாட்டு

3 அரை சதங்கள்: டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்தார் பாபர் ஆசம்

JustinDurai
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 3 அரை சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாகிஸ்தானின் பாபர் ஆசம்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் 2-வில் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லாத் துறையிலும் சமபலத்துடன் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
குறிப்பாக நடப்புத் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் ஆசம் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் 3 அரை சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையைப் அவர் பெற்றார். முதலாவதாக நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 51 ரன்களும் பாபர் அசாம் எடுத்திருந்தார்.
முன்னதாக டி20 வரலாற்றில் விரைவாக 1,000 ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் பதிவு செய்யதிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் 1,000 ரன்களை குவித்த முதல் ஜோடி என்ற பெருமையை முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் பெற்றுள்ளனர்.