விளையாட்டு

வீரர்கள் பாதுகாப்பு முக்கியம்: இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்

webteam

டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பின் இலங்கை வீரர்களில் சிலர் முகக்கவசம் அணிந்து கொண்டு களமிறங்கினர். இதனையடுத்து இலங்கை அணி வீரர்களிடம் நடுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கை வீரர்கள் விளையாட சம்மதித்ததை அடுத்து‌, மீண்டும் போட்டி தொடர்ந்தது.


இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், ‘ டெல்லி காற்று மாசு பற்றி எல்லோருக்கும் தெரியும். வீரர்கள் ஆடுகளத்தில் மூச்சு விட சிரமப்பட்டனர். வழக்கமான சீதோஷ்ண நிலை இல்லாததால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டிரெஸ்சிங் ரூம் திரும்பிய லக்மல், கமகே, தனஞ்செயா ஆகியோர் தொடர்ந்து வாமிட் எடுத்துக்கொண்டே இருந்தனர். பின்னர் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இது கிரிக்கெட்டில் புதுவிதமான பிரச்னை. அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நடுவர்களின் முடிவுக்கே விட்டுவிட்டோம். நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்துள்ளோம். அதை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அதோடு வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம்’ என்றார்.