பிரமோத் பகத் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

இந்திய பேட்மிண்டன்வீரர் 18 மாதங்கள் தகுதிநீக்கம்! பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்க முடியாது!பின்னணி?

Prakash J

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டின் இறுதிப்போட்டியில் கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை வீழ்த்தி தங்கம் வென்றவர், இந்திய வீரரான 35 வயதான பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத். இந்த நிலையில், கடந்த 12 மாதங்களில் பிரமோத் பகத்தின் ஊக்க மருந்து சோதனை மூன்று முறை தோல்வி அடைந்த நிலையில், அவர் ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதை கடந்த மார்ச் 1ஆம் தேதி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்பு பிரிவு கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் மாதம் 1ஆம் தேதி ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தொடங்கும் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பிரமோத் பகத் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: ”கமலா ஹாரிஸ் ஜெயிச்சா அமெரிக்கா அவ்ளோ தான்”|எலான் மஸ்க் உடனான உரையாடலில் ட்ரம்ப் காட்டமான விமர்சனம்!

இதுகுறித்து இந்திய பாரா-பேட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா PTI அளித்துள்ள பேட்டியில், “இது மிகவும் துயரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. அவர் பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று தருபவராக இருந்தார். அவர் போராடும் குணம் படைத்தவர். அவர் மீண்டும் வலிமையுடன் திரும்புவார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உள்ளார். 2015, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற பிரமோத் பகத், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. போலியோவால் பாதிக்கப்பட்ட பிரமோத் பகத்துக்கு, ஐந்து வயதில் இடது காலில் ஊனம் ஏற்பட்டது. என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து போராடி இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். தற்போது அவரது பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘மயில் கறி சமைப்பது எப்படி?’ - வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு!