மோடி - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் புதிய தலைமுறை
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்; கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க PT உஷாவிடம் அறிவுறுத்தல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

2024 பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு சென்ற வினேஷ் போகத், இறுதிப்போட்டியில் தேவையான எடையை விட கூடுதலாக 150 கிராம் எடை இருப்பதாக கூறிய ஒலிம்பிக் சங்கம் அவரை இறுதிப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வினேஷ் போகத்திற்கு தனது ஆறுதல்களை தெரிவித்துள்ளார்.

அதில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களுக்கு எல்லாம் சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடியவர். இன்றைய பின்னடைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் ஏமாற்றத்தின் உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.

அதே சமயம், நீங்கள் உறுதியின் சின்னம் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது எப்போதுமே உங்கள் இயல்பு. மீண்டும் வலிமையுடன் திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று, ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் நேற்று இரவு படைத்தபோதிலும், அது குறித்து எந்த ஒரு வாழ்த்துப்பதிவையும் தெரிவிக்காத பிரதமர் மோடி,வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தனது ஆறுதல் கருத்துக்களை மட்டும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபக்கம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன் உள்ள ஒலிம்பிக் வாய்ப்புகள் குறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி. வினேஷ் போகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தகுதிநீக்கத்திற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பி.டி.உஷாவிடம் அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.