மனுபாக்கர், நீரஜ் சோப்ரா எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில், பல்வேறு போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், இந்தியா 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றியது. இதில் முதல் இரண்டு வெண்கல பதக்கங்களை வேட்டையாடியவர் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கர்.

இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதுபோல் நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வேட்டையாடி இருந்தார்.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் அவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல், மனுபாக்கரின் தாயார் சுமேதா பாக்கரும் நீரஜ் சோப்ராவும் மற்றொரு காணொளி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா’ எனக் கேள்வி எழுப்பினர். அத்துடன், அவர்கள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (ஹரியானா) என்பதால் இதுகுறித்த பதிவுகள் வைரலாகின. அதேநேரத்தில், இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை எனவும் சிலர் சுட்டிக் காட்டினர். “நிறைவு விழாவில் மனு பாக்கர் அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளுடனும் பேசிக் கொண்டுதான் இருந்தார். எனவே, அதை வைத்து கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம். இந்தியாவில் ஓர் ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசினால் காதல், திருமணம் என பேசும் வழக்கம் இருக்கிறது" எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க: 'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மனுபாக்காரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”மனுபாக்கர் இன்னும் சின்னபொண்ணுதான். அவருக்கு இன்னும் திருமண வயதுகூட ஆகவில்லை. ஆகையால், நான் இப்போது அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. மேலும், மனுபாக்கரின் தாய் சுமேதா பாக்க, நீரஜை தன் மகனைப்போலவே கருதுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

அதுபோல் நீரஜ் சோப்ராவின் மாமாவும் இதுதொடர்பாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “நீரஜ் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டுவந்து, அதை நாட்டிற்கும் தெரியப்படுத்தியதுபோல, அவரது திருமணம் செய்துகொள்வதும் உலகத்திற்கு தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்து, கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் உடன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில், தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி 2வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

இதையும் படிக்க: ‘மயில் கறி சமைப்பது எப்படி?’ - வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு!