Angela Carini beated by Imane Khelif X
ஒலிம்பிக்ஸ்

பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா? 46 நொடிகளில் முடிந்த போட்டி.. பாரீஸ் ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!

Rishan Vengai

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தங்கள் நாட்டிற்காக உலக அரங்கில் பதக்கங்களை வெல்லும் கனவோடு ஒவ்வொரு வீரர், வீராங்கனையும் ஒலிம்பிக்கில் உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள். அப்படி கண்ணில் கனவோடும், நெஞ்சில் லட்சியத்தோடும் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்ற இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, தன்னுடைய கனவை எட்டிப்பிடிக்க இன்னும் இரண்டு அடிகளே மீதமிருந்த நிலையில் வெளியேறக்கூடாத வகையில் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

Angela Carini

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு 16வது சுற்றில் பங்கேற்ற இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, பயாலஜிக்கல் ஆண் (அதிகப்படியாக ஆணின் உடல் அமைப்பை கொண்டவர்) என அறியப்படும் அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃபுக்கு எதிராக மோதி 46 நொடிகளில் மூக்குடைந்த நிலையில் போட்டியிலிருந்து விலகினார்.

ஆணுடன் மோதினாரா இத்தாலிய பெண் வீராங்கனை?

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு 16வது சுற்று போட்டியானது இன்று நடைபெற்றது. அதில் இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கெலிஃபை எதிர்கொண்டு விளையாடினார். ஆனால் இமானே கெலிஃப் ஒரு பயாலஜிக்கல் ஆண் என அறியப்பட்டதால், கடந்த 2023 உலக சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்பட்டால். அந்த சோதனையில் கெலிஃப் தோல்வியடைந்ததால் அவரை உலக சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் கமிட்டி தகுதிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இமானே கெலிஃப் விளையாட அனுமதிக்கப்பட்டது ஆரம்பத்திலிருந்தே பேசுபொருளாக இருந்துவந்த நிலையில், இன்றைய பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி, பயாலஜிக்கல் ஆண் என அறியப்படும் இமானே கெலிஃபுக்கு எதிராக பங்கேற்று விளையாடினார்.

போட்டி தொடங்கிய 46 நொடியில் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கரினி மூக்கில் வேகமாக குத்துவிட்ட கெலிஃப், இத்தாலி வீராங்கனையுன் மூக்கை உடைத்தார். ரத்தம் வழிந்த நிலையில் அதிக வலியை பொறுத்துக்கொள்ள முடியாத கரினி இனி போட்டியில் தொடர முடியாது என நடுவரிடம் கூறிவிட்டார். அதனால் வெற்றிபெற்றதாக கெலிஃபின் கைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் போட்டியில் தோற்ற கரினி, கெலிஃபுடன் கைகுலுக்க கூட விருப்பமில்லாமல் விலகிவிட்டார். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேடையிலேயே முட்டிப்போட்டு கரினி அழ ஆரம்பித்துவிட்டார்.

இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, கரினியின் நிலைமையை பார்த்த நெட்டிசன்கள் “ஆண் மரபணு குணாதிசயங்களைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பெண்கள் போட்டிகளில் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்? இது நியாயமற்றது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெட்கப்பட வேண்டும்” என தங்களுடைய ஆதக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர் ஒருஆண்.. போட்டியில் கலந்துக்காதீங்க! 

ஏஞ்சலா கரினியின் தோல்விக்கு பிறகு பேசிய அவருடைய பயிற்சியாளர், “போட்டிக்கு முன்னதாக இத்தாலியிலிருந்து பலர் கரினியை அழைத்து 'தயவுசெய்து போகாதே, அது ஒரு ஆண், போட்டியில் பங்கேற்றால் அது உனக்கு ஆபத்தானதாக மாறும்' என்று எச்சரிக்கை செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு பிறகு பேசிய கரினி, "நான் என் மூக்கில் கடுமையான வலியை உணர்ந்தேன், ஒரு குத்துச்சண்டை வீரரின் முதிர்ச்சியுடன், 'போதும்' என்ற என்ற முடிவை நான் எடுத்தேன். ஏனென்றால் நான் தொடர விரும்பவில்லை, என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.

மேலும் பாலின தகுதி குறித்து பேசிய அவர், “நான் இங்கு தீர்ப்பளிக்க வரவில்லை. ஒரு தடகள வீரர் இப்படி இருப்பது சரி அல்லது சரியில்லை என்பதை நான் முடிவுசெய்ய முடியாது. நான் குத்துச்சண்டை வீரராக என் வேலையை மட்டும் செய்தேன், வளையத்தில் இறங்கி சண்டையிட்டேன். என் தலையை உயர்த்தி முன்னேறினேன். ஆனால் கடைசி கிலோமீட்டர் வரை செல்ல முடியாமல் உடைந்த இதயத்துடன் வெளியேறுகிறேன்” என்றுகூறி அழுகையை அடக்கமுடியாமல் பேசினார்.

தொடர்ந்து இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்ன முடிவை எடுக்கப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..