வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத் மனு தள்ளுபடி | எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்

PT WEB

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். ஆனால் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத், கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் அதிமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி எப்படியும் தங்கம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்திய ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கியது. 

வினேஷ் போகத்

ஆனால் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்த நிலையில், அரையிறுதிப்போட்டியில் வென்றதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

நீண்ட அலைக்கழிப்புக்கு பிறகு மனு தள்ளுபடி!

வினேஷ் போகத்தின் மனுவை எடுத்துக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், மனுமீதான தீர்ப்பினை ஒலிம்பிக் முடிவதற்குள் அளிப்பதாக கூறி தள்ளிவைத்தது. அப்படி ஆக.11 அன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதை ‘ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என இரண்டாவது முறையாக தள்ளிவைத்தது. பின் நேற்றும் தீர்ப்பு வழங்காமல் மீண்டும் 3 நாட்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் வினேஷ் போகத்தின் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட பதிவில், வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷா தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது.

தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்..

மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா கூறுகையில்,

இதுவரை விரிவான உத்தரவு வரவில்லை. மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது, ஏன் நிராகரிக்கப்பட்டது அல்லது அவர்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று உத்தரவில் அவர்கள் குறிப்பிடவில்லை. நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. விரிவான உத்தரவு 10-15 நாட்களில் வெளியாகும், அதன் பின்பு தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி முழு தீர்ப்பு வந்த பின்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.