விளையாட்டு

'மனரீதியாக துன்புறுத்துகிறார்கள்'-காமன்வெல்த் நிர்வாகம் மீது லவ்லினா பகிரங்க குற்றச்சாட்டு

webteam

லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டியுள்ளார்.

காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “எனது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்று விட்டது. என்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார்.

இதனால் நான் போட்டியில் எப்படி கவனம் செலுத்துவேன் என எனக்கு தெரியவில்லை. மனரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகிறேன். கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின்போதும் இதே நிலை ஏற்பட்டதால் அந்த தொடர் எனக்கு மிகவும் மோசமாக அமைந்தது. எந்த அரசியலிலும் தலையிட விரும்பவில்லை. இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் லவ்லினா.

யார் இந்த லவ்லினா?

லவ்லினா டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தவர் ஆவார். ஒலிம்பிக் தொடரில் குத்துசண்டையில் இந்தியாவிற்காக மூன்றாவது பதக்கத்தை வென்ற வீரர் லவ்லினாதான்!