விளையாட்டு

ஐபிஎல் இல்லையென்றால் சம்பளம் இல்லை : கலக்கத்தில் அறிமுக வீரர்கள்..!

webteam

ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் கனவுகளுடன் இருந்த அறிமுக வீரர்களுக்கு கலக்கம் தான் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் தொடங்கயிருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தள்ளிவைப்பு ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக எடுக்கப்பட்ட வீரர்களுக்கு பெரும் இழப்பு தான்.

ஐபிஎல் விதிமுறைப்படி போட்டிகள் தொடங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 15% சம்பளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும். பின்னர் தொடர் நடந்துகொண்டிக்கும்போது 65% சம்பளம் வழங்கப்படும். தொடர் முழுவதும் முடிந்த பின்னர் மீதமுள்ள சம்பளமும் கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை இன்னும் எந்த வீரருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கொரோனாவால் ஐபிஎல் தள்ளிப்போனதே இதற்கு காரணம்.

இந்த முறை ஐபிஎல் போட்டி நடக்காமல் போனால் அது அறிமுக வீரர்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அதேசமயம் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்படும்போது சம்பளம் குறைப்பு என்பதை உள்ளூர் வீரர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இருந்தாலும் அதற்கு மாற்று வழி இருக்கிறதா என்பதை பிசிசிஐ பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது என்றார் அவர்.

ஐபிஎல் போட்டிகளில் பல விலையுயர்ந்த வீரர்களுக்கு ரூ.75 முதல் 85 கோடி வரை சம்பளமாக கொடுக்க வேண்டும். ஐபிஎல் நடைபெறாமல் போனாலோ அல்லது குறுகிய காலம் நடத்தப்பட்டலோ இந்த தொகையை சம்பளமாக கொடுப்பது கடினம் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனா வைரஸுக்கு இடையே நடந்த இங்கிலாந்து பிரியமர் லீக் தொடரில் வீரர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.