விளையாட்டு

‘மாலத்தீவின் சாலையோர பாணிபூரி கடையில் தோனி’ - வைரல் வீடியோ

‘மாலத்தீவின் சாலையோர பாணிபூரி கடையில் தோனி’ - வைரல் வீடியோ

webteam

ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? எனப் பெரிய எதிர்பார்ப்பில் தவித்து வருகின்றனர். ஆனால் அவர் செவிகளுக்கு இந்தச் செய்தி போய் சேர்கிறதா எனத் தெரியாத அளவுக்கு, அவர் இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறார்.

இறுதியாக 2019 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக ஆடியபோது 50 ரன்களுடன் ரன்அவுட் ஆகி தோனி வெளியேறினார். அதன் பிறகு அவர் அணிக்கு திரும்பவே இல்லை. இந்திய ராணுவத்தில் சேர்ந்து தனது சேவையை அவர் ஆற்றிய போதும், அவர்தான் கிரிக்கெட் உலகின் தலைப்புச் செய்தியாக வலம் வந்தார். அவர் கிரிக்கெட்டை விட்டு தற்காலிகமாக விலகினாலும் கிரிக்கெட் வாழ்க்கை அவரை விட்டு விலகியதாக தெரியவில்லை. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை மையமாக வைத்தே செய்திகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை வாய்த்திறக்காத வீரர்களே இல்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில்கூட தோனி மறுபடியும் அணிக்கு திரும்புவது பற்றி கபில்தேவ் கருத்து தெரிவித்திருந்தார். தோனி பற்றி கபில்தேவ் பேசிய போது, “அவருக்கு இன்னும் ஐ.பி.எல் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால் அவருடைய ஃபார்ம் முக்கியமானதாக இருக்கும். மேலும் நாட்டிற்கு எது சிறந்தது என்பதை தேர்வாளர்கள் எண்ணி பார்க்க வேண்டும்” எனக் கூறி இருந்தார்.

இதே பிரச்னை குறித்து பேசிய ரவி சாஸ்திரி கூட, “அவர் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார். தோனியைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர் தன்னை அணியில் திணிக்க மாட்டார்” என்று கூறியிருந்தார்.

இந்தச் சர்ச்சையில் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும் தோனி, சற்றும் சஞ்சலம் இல்லாமல் மனைவி சாக்ஷி மற்றும் அவரது மகள் ஸிவாவுடன் அவர் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டிருந்தார். டேராடூன் அருகே உள்ள முசோரிக்கு சென்ற அவர், அங்கே விடுமுறை நாட்களை அழகாக கழித்தார். அதன்பிறகு துபாய் பயணத்தில் மூழ்கினார். தனது கணவரின் ஒவ்வொரு பயணத்தையும் சாக்ஷி, இன்ஸ்டாவில் விடாமல் பதிவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டார். ஆகவே தோனியை பற்றிய அப்டேட் செய்திகளுக்கு பஞ்சமே இல்லாமல் பறந்தது.

இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இப்போது தோனி மாலத்தீவுக்கு குடும்பத்தோடு பயணம் சென்றுள்ளார். இந்த முறை பயணத்தில் தோனியுடன் அவரது நண்பர்களாக ஆர்.பி.சிங் மற்றும் சாவ்லா ஆகியோரும் அணிவகுத்துள்ளனர். ஒரு இரவு நேரத்தில் மாலத்தீவுக்கு தோனி சென்று இறங்கியதை, அங்கே உள்ள அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் உலாவவிட்டனர். அதன் பிறகு தீயாக பரவியது அந்தப் புகைப்படம். அதன் பிறகு மாலத்தீவு கடற்கரையில் தோனி உற்சாகமாக குடும்பத்துடன் செலவழித்த புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில்தான், தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலாகி உள்ளது. மாலத்தீவு கடற்கரையில் சாலையோரமாக உள்ள பாணிபூரி விற்கும் கடையில், தன் நண்பர்களுக்கு அவரே பாணிபூரி தயாரித்து வழங்குகிறார்.

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அல்லாது இந்திய அணியின் வீரர்களும் அதிகம் விரும்பி பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் பதிவாகி உள்ள காட்சியில் தோனி, பூரியில் மசாலாவை அவரே தடவி சில வேலைகளை செய்கிறார். கருப்பு டி ஷர்ட் உடையில் மிகவும் ஜாலியாக இருக்கும் அவரது சுபாவத்தை கண்ட ரசிகர்கள் ‘தல’ தோனியை வெற லெவலில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.