விளையாட்டு

‘100 ஸ்டம்பிங்’: புதிய உலக சாதனை படைத்தார் தோனி

rajakannan

சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. போட்டியின் 45 ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திரா சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இலங்கை வீரர் தனன்ஜயாவை தோனி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார்.

இந்த ஸ்டம்பிங் மூலம் தோனி 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை முறியடித்துள்ளார். 300-வது போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

தோனிக்கு அடுத்தபடியாக உள்ள சங்ககாரா மொத்தம் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார். அவர் 360 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை செய்து இருந்தார். ஆனால் தோனி 301 போட்டிகளிலேயே ஸ்டம்பிங்கில் சதம் அடித்துள்ளார்.

தோனியின் இந்த சாதனையை முறியடிப்பது கடினம் என்றே கருதப்படுகிறது.