விளையாட்டு

சிஎஸ்கே வெற்றிபெற கைக்கூப்பி பிரார்த்தனை செய்த தோனியின் மகள்

JustinDurai
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தின்போது, சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் மகள் கைக்கூப்பி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள், 4 தோல்விகள் என 18 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறவில்லை என்றாலும், கேப்டன் எம்எஸ் தோனியின் மகள் ஜிவா தோனியின் புகைப்படங்கள் வைரலாகின. 5 வயதே ஆகும் ஜிவா, தனது தந்தையின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விரல் நகங்களை கடித்து பரபரப்புடன் காணப்பட்டார். கண்களை மூடி, கைகூப்பி பிரார்த்தனையும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில், ''நாங்கள் 150 ரன்கள் வரை எட்டுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை. சில விக்கெட்டுகளை இழந்தபின் 15வது ஓவரிலிருந்து அடித்து ஆட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் எங்களால் ரன் ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஆடுகளம் கடினமானதாக இருக்கிறது என நினைத்தேன்'' என்றார்.