விளையாட்டு

51 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த ‘மிராக்கிள்’ சம்பவம் - என்ன தெரியுமா?

51 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த ‘மிராக்கிள்’ சம்பவம் - என்ன தெரியுமா?

சங்கீதா

கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நாள் இந்த நாள். சொல்லப் போனால் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த அதிசய நாள் என்றே கூறலாம். கிரிக்கெட் என்றாலே சில நல்ல மற்றும் மோசமான வரலாற்று சம்பவங்கள் எந்தக் காலத்திலும் மறக்காது. அந்த சம்பவங்களும் எப்போதாவது தான் நடக்கும். அந்த வகையில், கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோரை, சேஸிங் செய்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றி கொண்ட தருணம் பற்றி காணலாம்.

மறக்க முடியாத மார்ச் 12ம் தேதி:

கடந்த 2005-06-ல் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக அப்போது விளங்கியது. இதனால் 4 போட்டிகள் முடிவில் 2-2 என்கிற வெற்றியின் கணக்கில் இரு அணிகளும் சம பலத்தில் இருந்தன.

இறுதிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருந்தநிலையில், ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரத்தில் நடைபெற இருந்தது. வரலாற்று நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை யாரும் அன்று போட்டி துவங்குவதற்கு முன்னதாக அறிந்திருக்கவில்லை. 2006-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி இறுதிப் போட்டி துவங்கியது.

ரன்மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள்:

டாஸில் வென்ற ஆஸ்திரேலியா வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆட்டம் துவங்கியதில் இருந்தே ரன் மழை பொழிந்தது ஆஸ்திரேலியா. தொடக்க ஆட்டக்கராரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் கேடிச் இருவரும் தென்னாப்பிரிக்க புவலர்களின் பந்துகளை விளாசித் தள்ளினர்.

15.2 ஒவர்களில் 97 ரன்கள். அப்போதுதான் தென்னாப்பிரிக்கா அணியால் தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால், அடுத்து வந்த ரிக்கி பாண்டிங் கில்கிறிஸ்ட்டை விட இன்னும் ஆக்ரோஷமாக விளையாடினார். அபாரமாக ஆடிய பாண்டிங் 164 ரன்களைக் குவித்தார். அதில் 13 பவுண்டரி, 9 சிக்ஸ் என மாஸ் காட்டினார்.

434 குவித்த அஸ்திரேலியா - குவிந்த பாராட்டு:

இன்று வரை அவர் அடித்த அதிகப்பட்ச ரன்கள் அதுவே. 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 434 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் 55, சைமன் கேடிச் 79, மைக்கல் ஹசி 81 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஒருநாள் போட்டிகளில் ஓர் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

ஆகையால், ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து மழை பொழிந்தது. அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா துவக்கத்திலேயே தன் முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது. அனைவரும் அவ்வளவு தான் என்று எண்ணிய நேரத்தில் துவக்க ஆட்டக்காரரும், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனுமான கிரீம் ஸ்மித் உடன் கிப்ஸ் இணைந்தார். அவ்வளவுதான். இருவரும் சேர்ந்து பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டனர்.

ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதத்தை விட மிக வேகமாக ஸ்கோர் ஏறியது. 22.1 ஓவரில் ஸ்கோர் 190 ஆக இருக்கும் போது ஸ்மித் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், ரன் விகிதம் குறையவில்லை. 23 ஓவரிலேயே ஸ்கோர் 200-ஐத் தொட்டது. கிப்ஸ் ஆஸ்திரேலிய பந்துகளைத் துவம்சம் செய்தார். ஸ்கோர் மளமள வென்று ஏறியது. 32-வது ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய கிப்ஸ்:

மிகவும் சிறப்பாக விளையாடி வந்த கிப்ஸ் 175 ரன்கள் (21 பவுண்டரி, 7 சிக்ஸ்) எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 299. இதையடுத்து 32.2 ஓவரில் 300 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா. இன்னும் 106 பந்துகளில் 134 ரன்கள் தேவை என்கிற நிலையில், கிப்ஸ் இல்லாததால், தென்னாப்பிரிக்க சற்று தடுமாறியது. கிட்டத்தட்ட 10 ஓவர்கள் கழித்து 41.5 ஓவரில் 350 ரன்னை எட்டியது தென்னாப்பிரிக்கா.

கடைசி நேரத்தில் அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்:

42.2 ஓவரில் ஆறாம் விக்கெட் விழ ஸ்கோர் 355 ஆக ஆனது. அதற்குமேல் அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது கடினம் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் நினைத்தனர். ஆனால், வான் தர் வாத் 20 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க, அடுத்து இறங்கிய டெலிமாகஸ் 6 பந்துகளில் 12 ரன்கள் குவித்தார். மீண்டும் ரன் மழை பொழியத் துவங்கியது.

46.4 ஓவரில் 400 ஐக் கடந்தது தென்னாப்பிரிக்கா அணி. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் மார்க் பவுச்சர் சீராக ஆடினார். 47 ஓவர்கள் முடிந்த போது, 30 ரன்கள் தேவைப்பட்டன. 48 ஓவர்கள் முடிந்த போதோ 13 ரன்களே தேவைப்பட்டன. 49 -வது ஓவரில் டெலிமாகஸ் வெளியேற, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஸ்கோர் 428 என்றானது. வெற்றி பெற இன்னும் 7 ரன்கள் தேவைப்பட்டன.

வெற்றியை நிர்ணயித்த திக்.. திக்.. நிமிடங்கள்:

இறுதி ஓவரில் பந்து வீச பிரெட் லீ வந்தார். முதல் பந்தில் பவுச்சர் ஒரு ரன் எடுத்தார். 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டாம் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹால். 4 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டன. இதனால் நிம்மதி அடைந்த நிலையில், அதற்கடுத்த பந்திலேயே ஹால் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்ட்டது.

எளிதாய் வெல்லலாம் என்றாலும், ஒரே விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது. நட்சத்திர வீரர் பவுச்சரும் எதிர் முனையில் இருந்தார். நிட்னி களமிறங்கினார். நான்காம் பந்தை வீணாக்காமல் ஒரு ரன் எடுத்து பவுச்சருக்கு வழி விட்டார் நிட்னி. இரு தரப்பும் ஒரே ஸ்கோர். அடித்தால் வெற்றி, விழுந்தால் டை என்ற நிலையில், வரலாற்று சாதனை படைத்த அந்த பந்தை எல்லைக் கோட்டை நீக்கி விளாசினார் பவுச்சர்.

4 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 438 ஆக உயர்ந்தது. தென்னாப்பிரிக்கா அணி வென்று சாதனை படைத்தது. யாராலும் இதை நம்பமுடியவில்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று விட்டது.

ஹேங்ஓவரில் விளையாடிய ஹிப்ஸ்:

இந்தப் போட்டியில், அதிகபட்ச ரன்கள் 111 பந்துகளில் 175 ரன்கள் எடுத்த கிப்ஸ், ஆஸ்திரேலியா ஆட்டத்திற்கு முதல் நாள் நள்ளரிவு வெளியே சென்று 1 மணி வரை குடித்துவிட்டு ஹாங் ஓவரில் (hangover) சிக்கி தவித்ததாக தனது சுயசரிதையில் பின்னாளில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்தப் போட்டியில், 10 ஓவரில் 113 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காத ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மைக் லூயிஸ், அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஒப்பந்தமும் அதன்பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இந்த வரலாற்று மகிழ்ச்சி கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. அதே 2006-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்தது.

யாராலும் முறியடிக்க முடியாத சேஸிங்:

ஆனால் நெதர்லாந்து அணி அந்த ஸ்கோரை சேஸ் செய்யமுடியவில்லை. இதனால், அதிகமாக சேஸ் செய்து வெற்றி பெற்ற போட்டி என்றால் அது ஆஸ்திரேலிய - தென்னாப்பிரிக்கா போட்டி தான். இதேபோல் 2018 -ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட தொடங்கியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 481 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது. எப்போது எதிர் அணியினர் யார் என்று பாராமல் நம்பிக்கை கொண்டு வியூகம் வகுத்து முயற்சி செய்தால், வெற்றி எளிதில் வசமாகும் என்பதற்கு இதுவே சான்றாகும்.