லிட்டன் தாஸ் pt web
விளையாட்டு

IND vs BAN |"என்னுடைய ரிஸ்க்கான அணுகுமுறை தான் எனக்குப் பலம்" - வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்!

Viyan

மறப்பது தான் அணிக்கு நல்லது

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது இங்கு பயன்படுத்தப்படும் SG பந்துகள் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ்.

மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் வெற்றி தங்களுக்கு நல்ல பெயர் கொடுத்திருந்தாலும், அதை விரைவில் மறந்துவிடுவது நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி யாரும் எதிர்பாராத வகையில் 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்று சரித்திரம் படைத்தது. ராவல்பிண்டியில் நடந்த முதல் போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், அடுத்த போட்டியை 6 விக்கெட்டுகளில் வென்றது. யாரும் எதிர்பாராத வகையில் வங்கதேசம் வெற்றி பெற்றது கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிப் பேசிய லிட்டன், அதை மறப்பது தான் தங்கள் அணிக்கு நல்லது என்று கூறினார்.

ரிஸ்க்கான அணுகுமுறை சாதகமாக அமைகிறது

"பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் அதை இப்போது மறந்துவிடுவேண்டும். அது கடந்த காலம். அடுத்து முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மீடியாவின் உதவியும் முக்கியம். நீங்கள் பாகிஸ்தான் தொடரைப் பற்றி இதற்கு மேல் எங்களிடம் பேசாமல் இருந்தால் அது நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர உதவும். ஒரு வீரராக, அந்தத் தொடர் எனக்குக் கடந்த காலம் தான்.

நீங்கள் சிறப்பாக செயல்படும்போது எல்லோருக்கும் உங்களைத் தெரியும் என்று நினைக்கும்போது நன்றாக இருக்கிறது. அதைவிட சிறந்த உணர்வு என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். அதேசமயம் இது நெருக்கடி என்றும் நான் சொல்லமாட்டேன். டெஸ்ட் அரங்கில் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இந்த ஃபார்மட்டில் இன்னும் நாங்கள் சீராக செயல்படவேண்டும். அதுதான் எங்களுக்கு முன் இருக்கும் மிகமுக்கிய சவால்" என்று கூறினார் லிட்டன் தாஸ்.

வங்கதேசம் கலக்கியதுபோல் லிட்டனும் கலக்கினார். முதல் போட்டியில் ஆடிய ஒரு இன்னிங்ஸில் அரைசதம் அடித்தவர், இரண்டாவது போட்டியில் சதமடித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார். கொஞ்சம் ரிஸ்க்கான அதிரடியான அணுகுமுறை தான் தனக்கு சாதகமாக அமைகிறது என்றும் கூறினார் அவர்.

என் அணுகுமுறையையே தொடர விரும்புகிறேன்

"இப்போது எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதுதான் சரியான தருணம். இப்போது வரை நான் 10 ஆண்டுகள் விளையாடிவிட்டேன். அதனால் நல்ல அனுபவம் பெற்றிருக்கிறேன். நான் எந்த பந்தெல்லாம் அடிக்ககூடியது என்று நினைத்தேனோ அதிலெல்லாம் ரன் சேர்க்க முனைவேன். ரன் எடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட்டத்தைக் கையாள்கிறார்களோ அப்படித்தான் நானும் கையாள்கிறேன் என்று நினைக்கிறேன்.

என்னுடைய அணுகுமுறை கொஞ்சம் ரிஸ்க் ஆனது தான். நான் அவுட் ஆக நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதேசமயம் நான் ரன் எடுக்கவும் நிறைய வாய்ப்புகளை அது ஏற்படுத்திக் கொடுக்கும். நான் பெரும்பாலும் மெஹதி ஹசன் மிராஜ் உடன் தான் பேட்டிங் செய்கிறேன். சில சமயம் சீனியர்கள் ஷகிப் அல் ஹசன் அல்லது முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகியோருடன் விளையாடுவேன். நான் அங்கு என்னுடைய ஷாட்களை ஆட முடியவில்லை என்றால் அணிக்கு எப்படியும் ரன் வராது. நான் என்னுடைய அணுகுமுறையையே தொடர விரும்புகிறேன். பயிற்சியின்போது எப்படி ஆடுகிறேனோ அப்படியே போட்டியின்போதும் விளையாட விரும்புகிறேன்" என்று கூறினார் அவர்.

அடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பற்றிக் கேட்டபோது, SG பந்து தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறினார் அவர். "இந்தியாவில் பந்து வேறாக இருக்கும். இங்கு பயன்படுத்தப்படும் SG பந்துகளைக் கையாள்வது சற்று கடினம். இதுவே கூக்கபரா பந்துகள் பழையதாகும்போது சற்று எளிதாக அதை எதிர்கொள்ள முடியும். ஆனால் SG பந்தில் அது அப்படியே நேர்மாறாக இருக்கும். அந்த SG பந்து பழையதான பிறகு அதிலிருந்து விலகி ஆடுவது எளிதில்லை" என்று கூறினார் லிட்டன்.