விளையாட்டு

’தனியொருவன்’ குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டு!

webteam

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடை யே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 304 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதை நோக்கி 2 வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. மிடில் ஆர்டரில் இறங்கிய குசல் பெரேரா மட்டும் நின்று ஆடிக்கொண்டிருந்தார். 69.4 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்னுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி உறுதியாகி இருந்தது.

ஆனால் குசல் பெரேரா ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக பந்துவீச்சாளர் விஷ்வா பெர்ண்டான்டோ தடுப்பாட்டம் ஆடி, உதவினார். ஸ்டெயின், ரபடா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட குசல் பெரேரா, யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குசல் பெரேரா 153 ரன் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க மண்ணில், இலங்கைக்கு கிடைத்த 2 வது டெஸ்ட் வெற்றி இது. இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இலங் கை வெற்றி பெற்றிருந்தது. வெற்றிக்கு பின் பேசிய குசல் பெரேரா, ‘’நான் என்னை நம்பினேன். என் பங்கை சரியாக செய்தேன். அணியாக த்தான் வெற்றி பெற்றோம். இது எனக்கு ஸ்பெஷலான இன்னிங்ஸ். கடுமையாக பயிற்சி மேற்கொண்டதற்கான பலன் இது’’ என்றார்.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு முன்னாள் கேப்டன் சங்ககாரா உட்பட பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.