விளையாட்டு

உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை!

webteam

பைக் விபத்தில் படுகாயம் அடைந்து சீரியசாக சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு பணம் இல்லாததால், சிகிச்சை நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரோடாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின். இந்திய அணியில், 10 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பரோடா அணிக்காக ஆடியுள்ள அவர், 127 போட்டிகளில் 8563 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 சதங்களும் அடங்கும்.

இவர், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சீரியஸாக இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டுள்ளது. அவரது மருத்துவ சிகிச்சைக்கு தினமும் ரூ.70 ஆயிரம் செலவாகிறது

குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாத நிலையில் மருத்துவமனை, சிகிச்சையை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மார்ட்டினின் குடும்பம் பரோடா கிரிக்கெட் வாரியத்திடம் உதவி கேட்டது. அவர்கள் உடனடியாக ரூ.3 லட்சம் வழங்கினர்.

அந்தப் பணம் போதவில்லை. மருத்துவச் செலவு 11 லட்சம் ரூபாயை தாண்டி விட்டதால், அவரது குடும்பம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உதவுமாறு கோரிக்கை வைத்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடியாக மருத்துவமனையில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்ததை அடுத்து சிகிச்சை தொடர்ந்து நடந்துவருகிறது என்று பரோடா கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.

சில நலம் விரும்பிகளிடம் உதவிகள் பெற்று 5 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து தான் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.