விளையாட்டு

சர்ச்சைகளை கடந்து ஐபிஎல் பயிற்சியில் களமிறங்கினார் ஷமி..!

webteam

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இறுதியாக டெல்லி அணியின் ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்றார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு ஷமி காயமடைந்தார். இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது.

இதனையடுத்து, முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதியானது. இதனால் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் ஷமி விளையாடுவது உறுதியானது.

இந்நிலையில், சர்ச்சைகளை கடந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணியினருடன் ஷமி இன்று பயிற்சியில் ஈடுபட்டார். விபத்துக்கு பிறகு மேற்கொண்ட முதல் பயிற்சி என்றாலும், அவரால் விளையாடக் கூடிய அளவிற்கு உடற்தகுதி இருந்தது. இருப்பினும் அவரது காயங்கள் முற்றிலும் குணமடையவில்லை என்பதால், காயங்களுக்கு போடப்பட்டுள்ள கட்டுகளுடன் அவர் பயிற்சி மேற்கொண்டார்.