விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூபாய் 74,000 அபராதம்

Rasus

காமன்வெல்த் போட்டியின் போது அறையை சேதப்படுத்தியதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 74 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவில் வீரர்-வீராங்கனைகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வீரர்கள் தங்குவதற்காக அறை, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி செய்து கொடுத்தது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் தங்கிய அறையின் கதவுகள், மின்விளக்கு, நாற்காலி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை சேதமடைந்ததாக காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்காக 74 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதை ஆய்வு செய்த இந்திய ஒலிம்பிக் சங்கம் கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், பளுதூக்குதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் ஆகிய வீரர்கள் தங்கிய அறைகள் சேதமடைந்துள்ளதாகவும், அந்தந்த சங்கத்தினர் இந்த அபராதத் தொகையை ஏற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது. அதிகபட்சமாக கூடைப்பந்து சங்கத்துக்கு 20 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் தொகை விதிக்கப்பட்டுள்ளது.