விளையாட்டு

உமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா

webteam

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 116.3 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்தது. அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 212 (255) ரன்கள் குவித்தார். ரஹானே 115 (192) ரன்கள் எடுத்தார். ஜடேஜா அரை சதம் விளாசினார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 56.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களில் அந்த அணி சுருண்டது. அந்த அணியில் ஷுபாய்ர் ஹம்ஷா மட்டும் அரை சதம் கடந்தார். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதைத்தொடர்ந்து ஃபால்லோவ் ஆன் முறைப்படி மீண்டும் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையை அடைந்தது. 3 முக்கிய விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றினார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும், இரண்டு நாட்கள் முழுமையாக மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.