விளையாட்டு

சிட்னி டெஸ்ட்: ரிஷாப் பன்ட் சாதனை சதம்!

webteam

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாராவை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் சதம் அடித்தார். 

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ராகுலும் களமிறங்கினர். கே.எல். ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மயங்க், 77 ரன் எடுத்தபோது, லியான் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராத் கோலி 23 ரன் எடுத்திருந்தபோது, ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப் பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், துணை கேப்டன் ரஹானே வந்தார். அவரும் புஜாராவும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

ஆனால், 18 ரன் எடுத்திருந்த நிலையில் ரஹானே, ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து விஹாரி வந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று நிதானமாக ஆடிய புஜாரா, தனது 18 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் இது அவருக்கு 3 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு, 303 ரன் எடுத்தது. புஜாரா 130 ரன்னுடன் விஹாரி 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், லியான் தலா ஒரு விக்கெட்டும் ஹசல்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். 

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே, விஹாரி, லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 42 ரன் எடுத்திருந் தார்.

அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், புஜாராவுடன் இணைந்தார்.  ரிஷாப் அதிரடி காட்ட, மறுமுனையில் பொறுமையாக ஆடிய புஜாரா, இரட் டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லியான் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார், புஜாரா. அவர் 373 பந்துகளை சந்தித்து, 22 பவுண்டரிகளுடன் 193 ரன்களை குவித்தார். 

அவரை அடுத்து ஜடேஜா, ரிஷாப்புடன் இணைந்தார். இருவரும் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து அடித்து ஆடினர். சிறப்பாக விளையாடிய ரிஷாப் பன்ட் அபார சதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்திருக்கிறார் ரிஷாப். இது அவருக்கு இரண்டாது டெஸ்ட் சதம். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் சதம் அடித்திருந்தார். 

காலை பத்தரை மணி நிலவரப்படி இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 529 ரன் எடுத்துள்ளது. ரிஷாப் 111 ரன்னுடனும் ஜடேஜா 40 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.