விளையாட்டு

மகுடம் சூடுமா இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

webteam

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்நிலையில் முதன்முறையாக மகுடம் சூடும் நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.   

ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக ரசிகர்களின் ஆர்வத்தை சமீபகாலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தூண்டி வருகிறது. உலகக்கோப்பையில் கேப்டன் மிதாலி ராஜின் உலக சாதனை, ஹர்மன்பிரீத்தின் அதிரடி ரன் மழை என பல்வேறு சாகசங்களை மகளிர் அணியினர் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கின்றனர் இந்திய மகளிர்.

லீக் சுற்றின் முதல் நான்கு ஆட்டங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை இந்திய அணி வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி நிலையில், நியூசிலாந்து அணியுடனான வாழ்வா? சாவா போட்டியில் எளிதில் வென்று அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. அரையிறுதியில் ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை அலற வைத்து இறுதிப்போட்டிக்கு அதிரடியாக இந்திய அணி முன்னேறியதால், இறுதிப்போட்டியை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.  

ஸ்மிரிதி மந்தனா, பூனம் ராவுத், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகியோருடன் கேப்டன் மிதாலி ராஜ், அதிரடி நாயகி ஹர்மன்பீரித் கவுர் என இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இதேபோல் ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ஏக்தா பிஸ்த், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர். குறிப்பாக தீப்தி ஷர்மா பந்துவீச்சிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

லீக் சுற்றில் இந்திய அணியை தவிர்த்து அனைத்து அணிகளையும் வென்றுள்ள கேப்டன் ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹீத்தர் நைட், டைலர் ஆகியோர் சிறந்த பேட்ஸ்வுமன்களாக உள்ளனர். அதேபோல கேத்தரின் பிரண்ட், ஸ்ரப்ஷோல் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்களும் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். எனினும், ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய தெம்புடன் களமிறங்கும் இந்திய அணியின் கரம் இறுதிப்போட்டியில் ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.